பேராக் மாநிலம் பங்கோர் தீவு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 37 ஆவணமற்ற குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு நேற்று அதிகாலை கவிழ்ந்து மூழ்கியதில் அதில் பயணம் செய்த 14 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இச்சம்பவம் குறித்து நேற்று அதிகாலை 5.30 மணியளவில் உள்ளூர் மீன்பிடி படகொன்று தகவல் அளித்ததைத் தொடர்ந்து, மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான எம்.எம்.இ.ஏ தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையில் கடலோர காவல் படை, கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களும் இணைந்து செயல்பட்டனர்.
இந்நிலையில், உள்ளூர் மீனவர்கள், 16 ஆண்களையும் 7 பெண்களையும் உயிருடன் மீட்டுள்ளதாக
பேராக் எம்.எம்.இ.ஏ இயக்குநர் ஷுக்ரி கொதோப் தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் போன 14 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








