May 21, 2026
Thisaigal NewsYouTube
ரந்தாவ் ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் விவகாரம்: 6 பேர் மீது மானநஷ்ட வழக்கு
தற்போதைய செய்திகள்

ரந்தாவ் ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் விவகாரம்: 6 பேர் மீது மானநஷ்ட வழக்கு

Share:

நெகிரி செம்பிலான், ரந்தாவ் ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவிலைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக, வின்வெளி டிவி செய்தியாளர் நாகேந்திரன் வேலாயுதம் உள்ளிட்ட 6 பேர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவிலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிவிட்டதாக, வின்வெளி டிவி நாகேந்திரன், அவரது மகன் பிரவின் மற்றும் 'வின்விழி மக்கள் மீடியா' மீது புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக செகுபாட், சுரேஷ் குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் மீதும் கோயில் நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விளக்கமளித்த கோவிலின் செயலாளர் டத்தோ ஆறுமுகம், "கோவிலின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இக்கோவில் சங்கப் பதிவிலாகாவான ROS கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நிர்வகிக்கப்படுகிறது. தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களைத் தவிர, கோவிலுக்கு என்று தனிப்பட்ட ஆலோசகர்கள் யாரும் இல்லை" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், "கோவிலின் பெயருக்குக் களங்கம் விளைவிப்போர் மீது இனியும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும். தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்; சந்தேகம் இருப்பின் நேரடியாகத் தன்னைத் தொடர்பு கொள்ளலாம்" என்றும் டத்தோ ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.

Related News