மலேசிய இந்திய மாணவர்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்காக, 7.955 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உயர்தர மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை மித்ரா வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. ‘பெரான்டி மாநிஸ்வா’ திட்டத்தின் கீழ், பி40 மற்றும் எம்40 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று புத்தம் புதிய மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.
மலாயா பல்க்கழகத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், "இந்திய மாணவர்கள் உயர்கல்வியில் எந்தத் தடையுமின்றி முன்னேற வேண்டும் என்ற அரசின் நோக்கத்தையே இந்த முயற்சி பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் கூறுகையில், கல்வி அமைச்சின் பரிந்துரைப்படி தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய பயனாளர் பட்டியல் மித்ரா இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
'யாயாசான் டிடிக் நெகாரா' அறவாரியத்தின் ஒத்துழைப்புடன் மித்ராவின் மடிக்கணினி விநியோகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தத் திட்டம் இந்திய மாணவர்களின் டிஜிட்டல் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களின் எதிர்கால வெற்றிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.













