கோலாலம்பூர், ஜூன்.05-
நாட்டில் 7 மாநிலங்களில் நெரிசல் மிக்க 121 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளைக் கல்வி அமைச்சு நிர்மாணித்து வருகிறது. இதனால் பள்ளிகளில் நிலவும் நெரிசல் பிரச்னை தீர்க்கப்படும் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்த, இந்த மேம்படுத்தும், திட்டத்திற்கும் 88 மில்லியன் ரிங்கிட் செலவாகுகிறது. இத்திட்டம், பொதுப்பணி இலாகா வாயிலாக பொதுப்பணி அமைச்சு அமல்படுத்தி வருகிறது.
இந்த நடவடிக்கையில் ஐபிஎஸ் எனப்படும் தொழில்துறை கட்டிட அமைப்பு மற்றும் பிஏபி எனப்படும் முன் அங்கீகரிக்கப்பட்ட திட்ட முறைகளைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.
இதன் மூலம் குறுகிய கால நிர்மாணிப்புப் பணிகள், நடப்பு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படுவது உறுதிச் செய்யப்படும் என்று மலேசியக் கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மொத்தப் பள்ளிகளில் சிலாங்கூர் மாநிலம் முன்னிலையில் உள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 103 பள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து பேராக்கில் 8 பள்ளிகளும், பகாங்கில் 4 பள்ளிகளும், நெகிரி செம்பிலானில் 3 பள்ளிகளும், திரெங்கானு, கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் தலா ஒரு பள்ளியும் சம்பந்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








