May 21, 2026
Thisaigal NewsYouTube
மித்ராவிற்கு கூடுதல் 50 மில்லியன் ரிங்கிட்  நிதி: பிரதமர் அன்வார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மித்ராவிற்கு கூடுதல் 50 மில்லியன் ரிங்கிட் நிதி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், மே.10-

மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு இந்த ஆண்டிற்கான கூடுதல் நிதியாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டுக்கான கூட்டரசு வரவுசெலவுத் திட்டத்தில் மித்ராவுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டுடன் சேர்த்து, தற்போது இந்த ஆண்டிற்கான மொத்த நிதி ஒதுக்கீடு 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.

மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணனுடன் இணைந்து இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுடனான சந்திப்பு மற்றும் மித்ரா மூலமாக இந்திய மாணவர்களுக்கு நிதி உதவி மற்றும் மடிக்கணினி ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், மித்ரா அமைப்பின் மேம்பட்ட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிதி வழங்குவது குறித்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, ஓரங்கட்டப்பட்ட மற்றும் வறுமையில் உள்ள இந்திய சமூகத்தினருக்குத் திட்டங்களைச் சரியாகக் கொண்டு சேர்த்ததில் மித்ரா சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

"மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் போதுமானதா என்று என்னிடம் கேட்டால், அது போதாது என்றே சொல்வேன். ஆனால், அந்த நிதி 100 மில்லியன் ரிங்கிட்டுடன் மட்டும் நின்று விடவில்லை. கடந்த காலாண்டில் அதன் சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, மேலும் 50 மில்லியன் ரிங்கிட்டை உயர்த்தி வழங்க நான் சம்மதித்துள்ளேன்," என்று நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இனம் அல்லது பின்னணி பார்க்காமல் சமூக நீதிக் கொள்கையைத் தனது அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார். வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் ஒருபோதும் இனத்தின் அடிப்படையில் அமைந்தவை அல்ல, மாறாகத் தேவையுள்ள மலேசியர்களை இலக்காகக் கொண்டவை என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் பேசிய மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன், மூவாயிரம் மாணவர்களுக்கு மனிடிக்கணினி மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

முன்னதாக பிரதமரின் வருகையையொட்டி மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள், நாதஸ்வர, மேளதாள இசையுடன் மகத்தான வரவேற்பை நல்கினர்.

Related News