கோலாலம்பூர், ஜூன்.03-
மலேசிய ஊடகவியலாளர் மன்றம் தொடர்பான ஆகக் கடைசியான நிலைவரங்கள் குறித்து வரும் ஜுன் 14 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய ஊடகவியலாளர்கள் தினமான Hawana (ஹவானா) நிகழ்வின் போது அறிவிக்கப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்துள்ளார்.
ஒரு தெளிவான நோக்கத்தின் அடிப்படையில் மலேசிய ஊடகவியலாளர் மன்றம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது, வெளியிடப்படக்கூடிய செய்திகளில் ஊடகவியலாளர்கள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது, ஊடகங்களுக்கு எதிராக பொதுமக்கள் அளிக்கக்கூடிய புகார்கள், முறையான இடத்தை சென்றடைவதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களுக்காக மலேசிய ஊடகவியலாளர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டத்தோ பாஃமி விளக்கினார்.
2024 ஆம் ஆண்டு மலேசிய ஊடகவியலாளர் மன்றம் மீதான சட்டத்தை இயற்றும் மசோதா, இவ்வாண்டு பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையும் டத்தோ பாஃமி சுட்டிக் காட்டினார்.








