நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரச குடும்பம் மற்றும் நிர்வாகம் தொடர்பான சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுகள் குறித்து, இதுவரை 49 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
பொதுமக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்ட பதிவுகள் குறித்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமட் தெரிவித்துள்ளார். தேச துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான ‘3R’ விவகாரங்களில் அவதூறு பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட டத்தோ அல்சாப்னி, மாநிலத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.








