சபா மாநிலம் குடாட், புலாவ் பாங்கி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சியாம் ஆரிஸ் ரய்யான் அப்துல்லா, தானும் ஒருநாள் பிரதமராக வேண்டும் என்ற தனது கனவை கடிதமாக எழுதி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் இன்று நேரில் வழங்கிய சம்பவம் அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எதிர்காலத்தில் அன்வாரைப் போல நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற தனது ஆசையை, சியாம் ஆரிஸ் தனது நண்பர்களிடம் பகிர்ந்தபோது, சிலர் அதை கேலியாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும், மனம் தளராத அவர் தனது விருப்பத்தை தாயார் நூர்சகீனா ஜுனைடியிடம் தெரிவித்ததுடன், அதை கடிதமாகவும் எழுதியுள்ளார்.
இந்நிலையில், அன்வார் இன்று புலாவ் பாங்கி பகுதிக்கு வருகை தந்தபோது, தாயாருடன் அங்கு வந்திருந்த சியாம் ஆரிஸ் அக்கடிதத்தை அவரிடம் நேரில் வழங்கினார்.








