மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்களுக்கு, வாரத்திற்கு 60 முதல் 62 மணி நேர வேலை வரம்பு அமல்படுத்தப்படாவிட்டால், அதற்கு அம்மருத்துவமனை இயக்குநர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்ஏ வலியுறுத்தியுள்ளது.
சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் மகாதர் அப்துல் வஹாப் நேற்று வெளியிட்ட வேலை நேர சுற்றறிக்கையானது ஏற்கனவே அமலில் உள்ள உத்தரவை நினைவூட்டும் நடவடிக்கையாக உள்ளதாக எம்எம்ஏ தலைவர் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இந்த நினைவூட்டலை மீண்டும் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதன் காரணம், மருத்துவமனைகளில் வேலை நேர வரம்பு தொடர்ந்து முறையாக பின்பற்றப்படவில்லை என்பதைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பயிற்சி மருத்துவர்கள், நடப்பு சூழலில், வாரத்தில் 85 மணி நேரங்கள் வரையில், வேலை செய்கிறார்கள் என்ற தகவல்கள் மிகுந்த கவலைக்குரியவையாக உள்ளதாகவும் டாக்டர் ஆர். திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இது வெறும் நலன் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், பயிற்சி மருத்துவர்கள் அதிகமான வேலைப் பளுவால் சோர்வடையும் பட்சத்தில் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே, வாரத்திற்கு 60 முதல் 62 மணி நேர வேலை வரம்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டும் இல்லாமல், நடைமுறையிலும் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் ஆர். திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.








