பத்துகேவ்ஸ், ஷெங்கா மாநாடு மண்டபத்தில் ரவாங் ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தைச் சேர்ந்த 77 மாணவர்களுக்கு கல்வி, கலை மற்றும் கலாச்சாரத் துறைகளில் சாதனை படைத்ததற்காக பட்டயச் சான்றிதழ்கள் வழங்கும் ‘முப்பெரும் பட்டமளிப்பு விழா’ கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மலேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு பிரமுகராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.
இந்த விழாவில், ரவாங் ஸ்ரீ சாரதா தேவி இல்லக் காப்பகத்தில் தங்கிப் பயிலும் 77 மாணவர்கள் முன்மழலையர் கல்வி, , பரதநாட்டியம் மற்றும் பாரம்பரிய சிலம்பக் கலை ஆகிய துறைகளில் தங்களின் சிறந்த தேர்ச்சிக்கான பட்டயங்களைப் பெற்றனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள பெண் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்கும் கல்விக்கும் அர்ப்பணிப்புடன் வழிகாட்டி வரும் சாரதா இல்லத்தின் சேவையைப் பாராட்டினார். மேலும், இந்த இல்லத்தை வழிநடத்தும் அதன் தலைவர் டாக்டர் குமரன் அடக்கலம் மற்றும் நிர்வாகத்தினரின் சமூகக் கடமையையும் அவர் வெகுவாகப் போற்றினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் கலைகட்டிய இந்த பட்டமளிப்பு விழா, அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிகழ்வில் பத்து எம்.பி. பி. பிரபாகரன் முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தி, முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி உட்பட சுமார் ஆயிரம் பேர் கலந்து சிறப்பித்தனர்.










