கோலாலம்பூர், செராஸ், தாமான் செகார் பகுதியில் உள்ள குடியிருப்பு நிலங்களின் தகுதியை குத்தகை நில உரிமையிலிருந்து நிரந்தர நில உரிமைக்கு மாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இந்த அவதூறு பரப்பியதற்கு எதிராக அவர் இரண்டு போலீஸ் புகார்களைச் செய்துள்ளார். சமீபத்தில் தாமான் செகார் பொது விளையாட்டு மைதானத்தை கையகப்படுத்துவது தொடர்பாக ஹன்னா இயோ நடத்திய செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது.
அகாடெமி தமடுன் ஆலாம் மெலாயு ஆய்வாளர் சஹாரா சுலைமான் என்பவர், ஹன்னா இயோ எவ்வாறு இந்த நில மாற்றத்தைச் செய்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஹன்னா இயோ, தாம் நிலக் குழுவில் உறுப்பினராகக் கூட இல்லை என்றும், அன்றைய சந்திப்பில் நில மாற்றம் குறித்துப் பேசவே இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார். முகநூல் நேரலை மற்றும் ஊடக அறிக்கைகளே இதற்கு சாட்சி என்றும், இந்த அவதூறுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருவதாகவும் புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.








