சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த பண மோசடி கும்பலுடன் தொடர்புடைய மூன்று மலேசியர்கள், ஜோகூர் பாருவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோகூர் மாநில வர்த்தக குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து சிங்கப்பூர் போலீசார் மேற்கொண்ட சோதனையின் மூலம் இந்த கும்பல் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உரிமம் பெற்ற டிஜிட்டல் வங்கியான மாரிபேங்க் மற்றும் சிங்கப்பூரின் மோசடி தடுப்பு மையமான ஏஎஸ்சி இடையேயான நெருங்கிய தகவல் பரிமாற்றத்தின் மூலம், மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பல வங்கி கணக்குகளின் பின்னணியில் மலேசியாவை தளமாகக் கொண்ட இந்த கும்பல் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏஎஸ்சி வழங்கிய உளவுத்தகவலின் அடிப்படையில், ஜோகூர் போலீசார் கடந்த மார்ச் 17-ஆம் தேதி அந்த கும்பலின் இருப்பிடத்தில் சோதனை நடத்தினர்.
இந்த நடவடிக்கையின் போது 83 கைப்பேசிகள், 45 வங்கி பாதுகாப்பு டோக்கன்கள் மற்றும் கும்பலின் செயல்பாட்டு மென்பொருள் இருந்த கணினி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.








