லங்காவியைச் சேர்ந்த “பப்லோ எஸ்கோபார் 2.0” போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் அதிகாரி “மிஸ்டர் A” -வுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என கெடா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த அதிகாரிக்கு எதிராகப் பல சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது வீடும், பணியிடமும் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கெடா மாநில போலீஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “‘மிஸ்டர் A’ பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டது ஏன்? என சமூக ஊடகங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அட்ஸ்லி அபு ஷா, அவருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என நேற்று கெடா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அந்த அதிகாரி கெடா மாநிலத்திற்குள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால், போலீசார் அவரை பாதுகாக்க முயற்சிப்பதாகவோ அல்லது காப்பாற்றுவதாகவோ பொதுமக்கள் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








