ஜாலான் தாப்பா-சங்காட் பெத்தாய் சாலையின் 12-வது கிலோமீட்டரில், நேற்று பசுவின் மீது மோதியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு சுமார் 8.10 மணியளவில், போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக, தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் சுங்கை மாணிக் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.
மேலும், வாகனத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தின் அடிப்படையில் அது ஒரு விலங்கு மீது மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் 20 வயதுடைய அந்த ஆடவர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்துள்ளார்.








