கூலிம் பெர்டானா நெடுஞ்சாலையில் முறையான அனுமதியின்றி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றை போக்குவரத்து இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சோதனையின்போது, 12 பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த வேனில், 19 மாணவர்கள் மிகவும் நெருக்கடியான மற்றும் ஆபத்தான நிலையில் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும், அந்த வாகனத்தின் சாலை வரி காலாவதியாகி இருந்ததோடு, காப்புறுதியும் இல்லை என்பது உறுதியானது.
இது குறித்துப் பேசிய கெடா மாநில போக்குவரத்து இலாகா தலைமை அதிகாரி ஸ்டீன் வான் லூதம், "வாகனத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது" என்றார். இது தொடர்பாக 42 வயது பெண் ஓட்டுநருக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விவகாரம் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.











