பாங்கி, மே.10-
மலேசியப் பிரதமர் பதவிக் காலத்தை அதிகப்படியாக 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்டத் திருத்தம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிறுவனச் சீர்திருத்தக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும் என அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார். அதிகாரக் குவிப்பைத் தடுத்து, மக்களாட்சி முறையில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய அன்வார் இப்ராஹிம் இத்தகைய முன்மாதிரியான முடிவை எடுத்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் இச்சட்டமூலம் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருத்தம் நிறைவேறாமல் போன நிலையில், நாட்டின் மக்களாட்சி முறையின் வளர்ச்சிக்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.








