கோலாலம்பூர், மே.10-
மலேசியாவில் அதிக வருமானம் ஈட்டும் பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெட்ரோல் மானியத்தைத் திரும்பப் பெறுவது குறித்து அரசாங்கம் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில், குறிப்பாக T15 , T20 பிரிவினரை இலக்காகக் கொண்டு இந்த மானியக் குறைப்பு நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான விரிவான பரிந்துரை அறிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது அதன் இறுதிக் கட்ட ஆய்வுகள் நடைபெற்று வருவதாக மலாயா பல்கலைக்கழக இந்திய மாணவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இந்த மாற்றத்தினால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருப்பதாகவும், தகுதியானவர்களுக்கே மானியம் சென்றடைவதை உறுதிச் செய்யப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். பணக்காரர்களுக்கு வழங்கப்படும் இந்த மானியத்தை நிறுத்தி, அதன் மூலம் மிஞ்சும் நிதியை ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். உலகளாவிய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளவும், நாட்டின் நிதி நிலையைப் பலப்படுத்தவும் இத்தகைய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் திட்டம் மிகவும் அவசியம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.








