பல்பொருள் அங்காடி ஒன்றில் மதுபாட்டில்கள் மற்றும் பால் மாவைத் திருடிய தம்பதிக்குக் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 7 நாள் சிறைத்தண்டனையும், 300 ரிங்கிட் அபராதமும் விதித்தது.
கண்காணியாக வேலை செய்யும் 38 வயது தி. சுகுமாரன் மற்றும் இல்லத்தரசியான அவரின் 43 வயது மனைவி எம். வாணிஸ்ரீ ஆகியோரே இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 8.22 மணியளவில் கோலாலம்பூர், ஜின்ஜாங், ஜாலான் பெந்தெங் உத்தாரா என்ற இடத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி கடையில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் ஃபாரா நபீஹா முன்னிலையில் நிறுத்தப்பட்ட சுகுமாறமும், வாணிஸ்ரீயும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இத்தம்பதியர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தங்களுக்கு எதிரான விசாரணையில், திருடப்பட்ட பொருட்களை வெறும் 65 ரிங்கிட்டிற்கு வாணிஸ்ரீயின் முன்னாள் கணவரிடம் விற்றதாக அவர்கள் தெரிவித்தனர். தங்களுக்குப் பேரக்குழந்தைகள் இருப்பதாகவும், வறுமை காரணமாக இக்குற்றத்தைப் புரிந்ததாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அவர்களுக்கு சிறையும், அபாரதத் தொகையும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 5 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் ஃபாரா உத்தரவிட்டார்.








