கோலாலம்பூர், ஜூன்.05-
தனது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் யூசோஃப் ரவுத்தரின் சிவில் வழக்கு தொடர்பான எட்டுக் கேள்விகளுக்கு விளக்கம் கோரியிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று நிரகாரித்ததைத் தொடர்ந்து அவர் மேல்முறையீட்டு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளார்.
இன்று புத்ராஜெயாவில் அப்பீல் நீதிமன்ற பதிவு அலுவலகத்தில் தமது வழக்கறிஞர் நிறுவனமான தேதுவான் ஸையின், மேகா அண்ட் மூராட் மூலமாக அன்வார் தனது மேல்முறையீட்டு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளார்.
78 வயதான அன்வார் சார்பில் அவரின் முதன்மை வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கே. ராஜசேகரன் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தாார்.
நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் அளித்த தீர்ப்பின் உள்ளடக்கத்தில் அதிருப்தி கொண்டுள்ள பக்காத்தான் ஹாராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார், அத்தீர்ப்பின் முடிவை எதிர்த்து இந்த மேல்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார் என்று ராஜசேகரன் குறிப்பிட்டார்.








