மலேசியாவில் 2024-ஆம் ஆண்டு முதல் மகளிர், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சின் புகார் முகப்புகளில் ஆண்களைப் பாதித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி கவலை தெரிவித்துள்ளார்.
காவற்படையின் புள்ளிவிவரங்களிலும் இதேபோன்ற உயர்வு காணப்படுவது, பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி முன்வந்து புகார் அளிக்கும் வகையில் அமைச்சு முன்னெடுத்துள்ள விழிப்புணர்வு திட்டங்களின் வெற்றியைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் அத்துமீறல்களைக் கண்டறிய பெற்றோர் தங்கள் குழந்தைகளின் புகார்களைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்றும், தாலியான் காசிஹ் போன்ற அரசு உதவி மையங்களை அணுகுமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.








