மலாய் ஆட்சியாளர்களின் அமைப்பை விமர்சிக்கும், மோசடி தொடர்பான உள்ளடக்கங்களை வெளியிடும் போலி கணக்குகளின் இருப்பைக் கட்டுப்படுத்துவதில், சமூக ஊடக ஜாம்பவானான 'மெட்டா' நிறுவனம் தொடர்ந்து தவறியது நிரூபிக்கப்பட்டால், அந்நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது.
இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளரும், தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசியாவில் சமூக ஊடகப் பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் நோக்கில், மெட்டா நிறுவனம், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி உடன் ஒத்துழைப்பை வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அவதூறு பரப்பு போலி கணக்குகள் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களிலும் காணப்பட்டாலும் கூட, குறிப்பாக ஃபேஸ்புக் தளத்தில்தான் இவை அதிக அளவில் உள்ளதாகவும் ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் மலாய் ஆட்சியாளர்களின் அமைப்பானது மிகவும் முக்கியமானதொரு அமைப்பானதாக அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஃபேஸ்புக் போன்ற பன்னாட்டுத் தளங்கள் உட்பட அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால், மெட்டாவிற்கு எதிராக வழக்குத் தொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








