சைபர்ஜெயாவில் உள்ள மெனாரா பாராகோன் பகுதியில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 13 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.
உணவகங்கள் மற்றும் விற்பனை மையங்கள் உட்பட மொத்தம் 16 வளாகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது 105 வெளிநாட்டினர் மற்றும் 89 மலேசியர்கள் சோதனையிடப்பட்டனர். இதில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த சூடான், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 26 முதல் 35 வயதுடைய 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் உள்ளூர் நபர் ஒருவருக்கு சாட்சி அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சகாரியா எச்சரித்துள்ளார்.















