சபா மாநிலம், பெனாம்பாங், கம்பூங் துந்துலுக் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், 16 வயது வெளிநாட்டுப் பெண் ஒருவர் கழுத்தில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட அப்பெண், நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் குளியலறைக்குள், இரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவ்வீட்டு உரிமையாளர் கண்டுள்ளார்.
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு, அந்த இளம் பெண், தனக்கு அறிமுகமான ஒருவரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்வீட்டின் அருகிலேயே வசித்து வந்த அவ்வீட்டின் உரிமையாளர், உள்ளே சென்று பார்த்த போது, அப்பெண் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.
மேலும், அவ்வீட்டிலிருந்து ஆடவர் ஒருவர் தப்பிச் சென்றதையும் உரிமையாளர் பார்த்தாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோத்தா கினபாலு குவீன் எலிசபெத் I மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.








