டெலிகாம் மலேசியா நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தடி கேபிள்களைத் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து உள்ளூர் ஆடவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ், சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இந்த ஐந்து பேரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளதாகத் தாய்பிங் மாவட்ட போலீஸ் துணை தலைவர் அப்துல் மாலிக் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பேராக், தைப்பிங் அருகே 35 முதல் 39 வயதிற்குட்பட்ட இந்த ஐந்து நபர்களில் இருவர் கேபிள்களை வெட்டிக் கொண்டிருந்தபோதும், மற்ற மூவர் அந்த கேபிள்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தபோதும் பிடிபட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு லாரி மற்றும் கேபிள்களை வெட்டுவதற்குக் கொண்டு வரப்பட்ட பல்வேறு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஆரம்பக்கட்ட விசாரணையில், இக்குழுவினர் ஒரு திட்டமிட்ட சிண்டிகேட் அமைப்பாகச் செயல்பட்டு, இப்பகுதியில் தொடர்ந்து கேபிள் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இந்தத் திருட்டு கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரைத் தேடும் பணியில் போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு, பிடிபட்டவர்கள் மீது குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.








