நாட்டின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவை மறுஆய்வு செய்யும் பணியில் தனியார் துறை முதலாளிகளும் தொழிலாளர்களும் தீவிரமாகப் பங்கேற்குமாறு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய பொருளாதார சூழல், வாழ்க்கைச் செலவு மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றிற்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்காக, மே 6-ஆம் தேதி முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை ஒரு முக்கிய இணையவழி கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.
தனியார் துறையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்தத் தகவல்கள் அனைத்தும் இரகசியமாகப் பேணப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். வருங்காலத்தில் ஒரு வலுவான மற்றும் நியாயமான ஊதியக் கொள்கையை உருவாக்க இந்த ஆய்வின் முடிவுகள் அடிப்படையாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் கருத்துக்களை வழங்க விரும்பும் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள், அமைச்சகம் வழங்கியுள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம் என்று டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக்கொண்டார்.










