நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் திடீர் நிதிச் சுமையை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, எரிபொருள் மானியத்திற்கான வருமான வரம்பை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருவதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் தெரிவித்துள்ளார்.
மானியத்திற்கு தகுதியானவர்கள் மற்றும் மானிய பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோருக்கிடையிலான துல்லியமான வரம்பை நிர்ணயிப்பதே அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மானிய விலையில் எடுக்கப்படும் முடிவுகள், அரசாங்கத்தின் உதவி தேவைப்படும் தரப்பினருக்கு, எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதால், தேவைப்படுவோர், தேவையற்றவர்களுக்கு இடையிலான சரியான வரம்பை தீர்மானிக்கும் முக்கிய ஆலோசனைகளில் அரசாங்கம் உள்ளதாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் குறிப்பிட்டுள்ளார்.
அக்கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இலக்கிடப்பட்ட அணுகுமுறையின் மூலம் மக்களின் தேவைகளையும் அரசின் கொள்கைகளையும் சமநிலைப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








