சர்வதேச அருங்காட்சியக தினம் 2026-ஐ முன்னிட்டு, மலேசிய அருங்காட்சியகத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து 19 அருங்காட்சியகங்களிலும், வரும் மே 18 ஆம் தேதி மலேசியர்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முயற்சி குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அருங்காட்சியகங்களைப் பார்வையிடும் பழக்கத்தை ஊக்குவித்து, நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகும் என தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ தகாங் தெரிவித்துள்ளார்.
இன்று தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்ற மத்திய மண்டல ஒற்றுமை வாரம் 2026 விழாவில் பேசிய அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தேசிய ஒற்றுமை அமைச்சு, மலேசிய அருங்காட்சியகத் துறை மற்றும் ஜோகூர் பாரம்பரிய அறக்கட்டளையுடன் இணைந்து, சர்வதேச அருங்காட்சியக தினம் 2026 கொண்டாட்டத்தை, வரும் ஜூன் 23 முதல் 30 வரை ஜோகூரில் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








