மலாயன் ரயில்வே பெர்ஹாட் நிறுவனமான கேடிஎம்பி, தனது ‘கிள்ளான் பள்ளத்தாக்கு இரட்டை ரயில்பாதை கட்டம் 2’ என்ற கேவிடிதி2 திட்டத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் சவால்களை ஊடகங்களுக்கு விளக்கும் வகையில் ஒரு களப்பயணத்தை இன்று காலையில் ஏற்பாடு செய்திருந்தது. பண்டார் தாசிக் செலாத்தான் முதல் காஜாங் வரையிலான பாதையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் ரயில் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த 265 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை ரயில்பாதைகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரே ஒரு தடத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால், அட்டவணை மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கேடிஎம்பி செயலாக்க தலைமை செயல்முறை அதிகாரியான எஞ்சிக் அஃப்ஸார் ஜகரியா, தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களைக் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்த தற்காலிக மாற்றங்கள் மற்றும் சவால்களை ஊடகவியலாளர்கள் நேரடியாகப் பார்வையிட இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. சிக்னல் மற்றும் மின்மயமாக்கல் போன்ற முக்கியப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஊடகவியலாளர்களுடான இந்த ரயில் பயணத்தின் போது இத்திட்டத்தின் நிர்வாகமான தாயா மாஜு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் துணை திட்ட துணை இயக்குநர் மனோஜ் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தனர்.












