ஜார்ஜ்டவுன், ஜூன்.05-
மூன்று தினங்களுக்கு முன்பு, ஜார்ஜ்டவுன், ஜாலான் கெலாவேய் சாலையில் பெண் வாகனமோட்டியைக் கைத்துப்பாக்கிக் கட்டையினால் அடித்து கடும் காயத்தை விளைவித்ததாக நம்பப்படும் டத்தோஸ்ரீ அந்தஸ்தை கொண்ட பிரமுகர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளர்.
காயமுற்ற பெண் வாகனமோட்டி அளித்த புகாரைத் தொடர்ந்து, 41 வயதுடைய அந்த டத்தோஸ்ரீ நேற்று காலை 9.30 மணியவில் பினாங்கு, திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதுடைய பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இவ்விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில், அந்த டத்தோஸ்ரீ கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசென்ஸ் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக திமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரொஸாக் முகமட் தெரிவித்தார்.
தத்தம் வாகனங்களைச் செலுத்தும் போது ஏற்பட்ட தகராற்றில் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தாக நம்பப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.








