காசா குழந்தைகளைச் சென்றடையும் என்ற நோக்கத்தில் கடலில் சாக்லேட்டுகளை வீசிய விவகாரம் பெரும் பொது விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியதை அடுத்து, மலேசிய சமூக ஊடகத் தாக்காளரும் மனிதநேய ஆர்வலருமான முகமது ஹாரீஸ் அத்ஸ்ராமி என்னப்படும் ஹாரோக்ஸ் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு குளோபல் சுமூத் புளோட்டிலா என்ற மனிதநேய உதவி இயக்கக் கப்பலில் பயணம் செய்தபோது, அவர் இவ்வாறு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும் மற்றும் கடலை மாசுபடுத்தும் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஹாரோக்ஸ், கடலை மாசுபடுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், எந்த வழியிலாவது அந்தச் சாக்லேட்டுகள் பாலஸ்தீனக் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும் என்ற ஆதங்கத்திலுமே அவ்வாறு செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். மாற்று வழிகள் இல்லாததால் உணர்ச்சிவசப்பட்டுச் செய்த இந்தச் செயலுக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.








