மாராங், மே.10-
கடந்த மார்ச் 16 முதல் நடத்தப்பட்ட ஓப்ஸ் திரிஸ் 4.0 ஒருங்கிணைந்த சோதனையில், இதுவரை 23.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 42,894 சோதனைகளில் 556 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 161 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதன் செயல்பாட்டுப்பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக டீசல் கடத்தலில் சரவாக் மாநிலமும், பெட்ரோல் முறைகேட்டில் கிளந்தான் மாநிலமும் முதலிடம் வகிக்கும் நிலையில், எல்லைப் பகுதிகளில் கடத்தலைத் தடுக்க காவற்படையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.








