கோலாலம்பூர், ஜூன்.05-
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது அறிவித்துள்ள மலாய்க்கார இனத்தைக் காப்பாற்றும் பாயுங் மலாயு திட்டம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வீழ்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் மறைமுக நடவடிக்கையா? என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டில் உள்ள மலாய்க்கார இனத்தைக் காப்பாற்றவும், அவர்களை மீட்டெடுக்கவும் இந்த பாயுங் மலாயு திட்டம் பெரும் துணை புரியும் என்று துன் மகாதீர் அறிவித்த போதிலும் அதன் வியூகம் மற்றும் அதன் செயல்பாடு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளன என்று ஸையிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களை ஒன்றுப்படுத்துவதற்கும், அவர்களின் நலன்களை மீட்டெடுப்பதற்கும், இதற்கு முன்பு தொடங்கப்பட்ட பல திட்டங்கள் தோல்வி கண்டு இருப்பதை ஸையிட் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக மலாய்க்கார்களின் நலனை மீட்டெடுப்பதாகக் கூறிக் கொண்டாலும், இந்த திட்டங்களில் சம்பந்தப்பட்டு இருந்த அம்னோவும், பாஸ் கட்சியும், தங்களின் சொந்த அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில்தான் நோக்கமாக இருந்தன.
ஆனால், துன் மகாதீர் அறிவித்துள்ள இந்த பாயுங் மலாயு திட்டம், பிரதமர் அன்வாரை வீழ்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம் போல் உள்ளது என்று அந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அச்சம் தெரிவித்துள்ளார்.








