கோலாலம்பூர், ஜூன்.05-
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பேராளர்கள் குழு ஒன்று, அண்மையில் மலேசியாவிற்கு மேற்கொண்ட வருகையைத் தடுப்பதற்கு பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்தியாவின் என்டிதிவி வெளியிட்டுள்ள செய்தியில் இது தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் ஒற்றுமையைப் புலப்படுத்தும் நோக்கில் இந்திய பேராளர்கள் குழுவின் வருகையை மலேசியா தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தூதரகத்தின் வாயிலாக இந்த நெருக்குதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் பாகிஸ்தான் முயற்சி வெற்றி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ சஞ்சய் குமார் ஜா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவினர், கடந்த வாரம் கோலாலம்பூருக்கு வருகை புரிந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் ஏற்பட்டுள்ள அண்மைய நிலவரங்கள் குறித்து விளக்குவதும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் பொதுவான போராட்டத்தில் மலேசியாவின் ஆதரவைப் பெறுவதும், பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதும் இந்த குழுவினரின் மலேசிய வருகைக்கான நோக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








