கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா பகுதியில் ஏற்பட்ட நில அமிழ்வில் சிக்கி உயிரிழந்த இந்தியச் சுற்றுலாப் பயணியான விஜயலட்சுமியின் குடும்பத்திற்கான இழப்பீடு குறித்து நீதிமன்றமே இறுதி முடிவெடுக்கும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கோலாலம்பூரில் இதற்கு முன் இது போன்றதொரு சம்பவம் நடந்ததில்லை என்பதால், இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினர் வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றம் நிர்ணயிக்கும் தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது என்று ஹன்னா இயோ குறிப்பட்டார்.
2024 ஆகஸ்ட் 23 அன்று, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 48 வயது விஜயலட்சுமி, சாலையில் நடந்து சென்றபோது திடீரென ஏற்பட்ட 8 அடி நில அமிழ்வில் சிக்கி, சாக்கடைக்குழியில் விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் தற்போது மலேசிய அரசாங்கத்திடம் சுமார் 8.24 லட்சம் ரிங்கிட் இழப்பீடு கோரி வருகின்றனர். இந்தச் சூழலில், சட்ட நடைமுறைகளின்படி உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அமைச்சர் ஹன்னா இயோ உறுதிப்படுத்தியுள்ளார்.








