இராஜயோக சக்தி மிகுந்த ஆழ்நிலை தியான இயக்கமான ஆர்.பி.டி , கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ‘மகா அன்னதானம்’ எனும் உன்னத சேவையைச் சிறப்பாக நடத்தி வருகிறது. இவ்வியக்கத்தின் ஸ்தாபகர் டத்தோ ஸ்ரீ குருஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, டத்தின் ஸ்ரீ குருமாதா அவர்களின் ஏற்பாட்டில், நேற்று மே 9 ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளான், பண்டாமாரான் ஸ்ரீ சுப்ரமணியர் தேவஸ்தான ஆலயத்தில் 'மகா அன்னதானம் 2026' மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
குருஜியின் புதல்வி டாக்டர் சீதா பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலேசியா மட்டுமின்றி சிங்கப்பூர், இந்தியா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர். அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய பூஜைகளைத் தொடர்ந்து, மதியம் மகா பிரசாதமாக அன்னதானமும் லட்டுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு வருகையாளராக வருகை தந்த டத்தோ ஸ்ரீ குருஜி அவர்களுக்கு ஆலய நிர்வாகம் சிறப்பான மரியாதை செய்தது. தொடர்ந்து, குருஜி அவர்களின் தலைமையில் ‘மகேஸ்வர பூஜை’ பக்திப்பூர்வமாக நடைபெற்றது என்று மகா அன்னதானம் 2026 இன் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் டாக்டர் கோமதி விவரித்தார்.
இந்த நிகழ்வின் போது, பண்டாமாரன் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய திருப்பணிக்காக, டத்தோ ஸ்ரீ குருஜி அவர்கள் 10 ஆயிரம் நன்கொடையை ஆலய நிர்வாகத்திடம் வழங்கினார்கள். அதன் பின், ஆலய வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மேடைக்குச் சென்று, கூடி இருந்த ஆர்.பி.டி சீடர்களையும் பொது மக்களையும் டத்தோ ஸ்ரீ குருஜி சந்தித்தார். அனைத்து ஆர்.பி.டி சீடர்கள் சார்பாக டத்தோ ஸ்ரீ குருஜி அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. டாக்டர் சீதா அவர்களின் முன்னுரைக்குப் பின், டத்தோ ஸ்ரீ குருஜி அவர்கள், மிகவும் ஆவலுடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் கூடி இருந்த அனைவர் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த விழா ஆன்மீகம் மட்டுமல்லாது, கரகாட்டம், மயிலாட்டம், சிங்க நடனம் போன்ற கலைகளுடன் கலாச்சார சங்கமமாகவும் திகழ்ந்தது.
600-க்கும் மேற்பட்ட ஆர்.பி.டி தொண்டூழியர்கள் பாதுகாப்பு மற்றும் உணவுப் பரிமாற்றப் பணிகளைச் சீராக மேற்கொண்டனர். முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்ததுடன், 20 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் அவசர சிகிச்சைக்காகத் தயார் நிலையில் இருந்தனர்.
சமயம், கலாச்சாரம் மற்றும் குடும்ப ஒற்றுமைக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்ற குருஜியின் உயரிய நோக்கத்தைப் பிரதிபலித்த இந்நிகழ்வு, பங்கேற்ற அனைவருக்கும் மிகுந்த மனநிறைவையும் தெய்வீக உணர்வையும் அளித்தது.













