கோத்தா கினபாலு, ஜூன்.05-
மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், அண்மையில் சபா, ஹோட்டல், ரிசோர்ட் மற்றும் உணவகத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத்தின் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
மனித வள அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த 17 மாதங்களில் ஸ்டீவன் சிம், நேரடி வருகை தந்து, அவர் சந்தித்த 30 ஆவது தொழிற்சங்கம் இதுவாகும்.
கடந்த மே முதல் தேதி அமலுக்கு வந்த சபா மற்றும் சரவாக் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்குப் பிறகு, போர்னியோவிற்கு அமைச்சர் மேற்கொள்ளும் இது முதலாவது அதிகாரப்பூர்வ வருகையாகும்.
இந்த வருகையானது, நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகள் நியாயமாகவும், சமமாகவும் பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதில் மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
சபா மற்றும் சரவாக்கில் உள்ள தொழிலாளர்களை விட தீபகற்பத்தில் உள்ள தொழிலாளர்கள்தான் சிறந்த சட்டப் பாதுகாப்பை அனுபவிக்க முடியும் என்று வெறுமனே விட்டு விட முடியாது. மாறாக, மலேசியாவில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒரே மாதிரியான சட்டப் பாதுகாப்பையும் அனுகூலங்களையும் அனுபவிக்க வேண்டும் என்றார் ஸ்டீவன் சிம்.
எனவேதான் சபா, சரவாக்கில் இந்த அவசரச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப்பட்டதன் மூலம், கடந்த இரண்டு தசாப்த காலமாகத் தொழிலாளர்களுக்கு நேர்ந்த அநீதிக்கு தாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் தமது உரையில் வலியுறுத்தினார்.
சபா மற்றும் சரவாக் தொழிலாளர் அவசரச் சட்டத் திருத்த அமலாக்கத்தின் வாயிலாக அச்சட்டம் தொழிலாளர்களுக்கு நேரடி நன்மைகளை வழங்குகிறது. இதில் வாரத்திற்கு 3 மணி நேரம் வேலை நேரம் குறைக்கப்பட்டு 45 மணி நேரமாக்கப்பட்டுள்ளது.
98 நாட்கள் மகப்பேறு விடுப்பு, ஏழு நாட்கள் தந்தை வழி விடுப்பு, அத்துடன் சம்பள வரம்புகள் இல்லாத அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த அவசரச் சட்டத்தின் சலுகைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.








