மலேசிய இலக்கவியல் அமைச்சின் துரித நடவடிக்கையால், ‘பிஎம்கேஎஸ் மடானி இலக்கவியல் மானியமான GDPM, தொடர்பான அனைத்து நிலுவைத் தொகைகளும் முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்துள்ளார்.
நிதியமைச்சுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் தலையீட்டின் மூலம், இதுவரை பாதிக்கப்பட்டிருந்த நிறுவனங்களுக்கு மொத்தம் 19 மில்லியன் ரிங்கிட் நிதி, பிஎஸ்என் வங்கி வாயிலாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த மானியம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற நவீனத் தொழில்நுட்பங்களுக்கு மாறுவதற்குப் பெரிதும் உதவுகிறது என்று அமைச்சர் கோபிந்த் சிங் விளக்கினார்.
ஒவ்வொரு ரிங்கிட்டும் உரியப் பயனாளர்களை விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்வதே எங்களின் முன்னுரிமை" என்று தெரிவித்த அமைச்சர், 2030-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு 'AI தேசமாக' மாற்றுவதே இலக்கு என்றார்.








