ஜோகூரில் நேற்று அதிகாலை 5.40 மணியளவில், செனாய் நோக்கி செல்லும் இரண்டாம் இணைப்பு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 25.3 பகுதியில், ஐந்து வாகனங்கள் தொடர்புடைய விபத்தில் வெளிநாட்டு நபர் ஒருவரும், உள்ளூர் நபர் ஒருவரும் உயிரிழந்தனர்.
இருவர் பயணித்த அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமாரசன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில், காரை ஓட்டிச் சென்றவர் வெளியே தூக்கி வீசப்பட்டு வலது பாதையில் விழுந்த நிலையில், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதாகவும் எம். குமாரசன் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான காயமடைந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், காரில் பயணித்த மற்றொரு நபர் பாலத்திற்குக் கீழே விழுந்ததால் அவரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 37 வயதுடைய இந்திய பிரஜை மற்றும் 34 வயதுடைய உள்ளூர் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.








