ஹாக்ஸ்பில் இனத்தைச் சேர்ந்த அரிய வகை கடல் ஆமை ஒன்று மலாக்கா மாநிலம் பெங்காலான் பாலக் கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், இறந்த நிலையில் கிடந்த அந்த ஆமையைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
ஹாக்ஸ்பில் வகை ஆமையானது உலகளவில் மிகவும் அபாய நிலையில் உள்ள அரிய கடல் ஆமை இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
பவளப்பாறை சூழலின் சமநிலையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த இனத்தின் எண்ணிக்கை, மீன்பிடி வலைகள், கடல் மாசுபாடு மற்றும் சட்டவிரோத வேட்டை காரணமாக குறைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதனிடையே இறந்த ஆமையானது, ஆண் இனத்தைச் சேர்ந்தது என்றும், அதன் ஓட்டின் நீளம் 80 செ.மீ. மற்றும் அகலம் 72 செ.மீ. இருப்பதன் அடிப்படையில் சுமார் 10 முதல் 15 வயதுக்குள் இருக்கலாம் என்றும் மலாக்கா மாநில மீன்வளத்துறை இயக்குநர் சௌஃபி அஃபான்டி தாலிப் தெரிவித்துள்ளார்.








