தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான பல தலைமுறைகள் தாண்டிய உறவை விஜய்யுடன் இணைந்து மேன்மேலும் சிறப்பாக தொடர விரும்புவதாகவும் அன்வார் தமது சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக, ஊழல் அரசியல்வாதிகளையும் பல்வேறு வில்லன்களையும் மூன்று மணி நேரத்திற்குள் வீழ்த்தும் விஜயை அவரது ரசிகர்கள் திரையில் ரசித்து வந்ததாக தெரிவித்துள்ள அன்வார், தற்போது தமிழ்நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்திருப்பது திரை உலகக் கதாபாத்திரங்களை விட மிகப் பெரிய பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,“ஒரு விரல் புரட்சி” தற்போது வரலாறு படைக்கும் தருவாயில் உள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மலேசியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பல தலைமுறைகளாக ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் மக்கள் தொடர்புகள் இருந்து வரும் நிலையில், எதிர்வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் விஜயுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் அன்வார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.








