பினாங்கு மாநில முதலமைச்சரின் இரண்டு கால தவணை, அதாவது 10 ஆண்டுகள் பதவிக்கால வரம்பை திருத்துவதற்கான எந்தத் திட்டமும் தற்போது மாநில அரசுக்கு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
மாநில அரசியலமைப்பில் முதலமைச்சர் பதவிக்கான காலவரம்பு குறித்து ஏற்கனவே தெளிவான விதிமுறைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநில அரசியலமைப்பின் பிரிவு 7, உட்பிரிவு 2(a)-ன்படி, பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரை மட்டுமே யாங் டி பெர்துவா நெகிரி, முதலமைச்சராக நியமிக்க முடியும்.
மேலும், அந்த நபர் இதற்கு முன்பு இரண்டு தவணைகள் முதலமைச்சர் பதவியை வகித்திருக்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலச் சட்டமன்றம் ஒருவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளை எட்டுவதற்கு முன்பே கலைக்கப்படும் சூழ்நிலைகளில், ‘இரண்டு தவணைகள்’ என்ற சொல் முதல் மற்றும் இரண்டாவது பதவிக்காலங்களில் உள்ள ஆண்டுகளின் மொத்தக் கணக்கீடாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று சாவ் கோன் இயாவ் இன்று நடைபெற்ற மாநிலச் சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.








