நாளை மே 10-ஆம் தேதி, உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, குடும்பங்களின் அமைதிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் தாய்மார்கள் ஆற்றி வரும் பங்களிப்பிற்கு மனிதவள அமைச்சரும், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
தாயின் அன்பு, தியாகம் மற்றும் பிரார்த்தனைகள், குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டுமல்லாது மனிதாபிமானம் மிக்க சமுதாயத்தையும் உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், அன்னையர் தினம் வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், உழைக்கும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை மதிப்பிடும் ஒரு முக்கிய தருணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெண்களின் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் குடும்ப நல்வாழ்வு தொடர்பான சவால்களுக்கு அதிக கவனம் தேவைப்படுவதாகவும் ரமணன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மனிதவள அமைச்சும், பெர்கேசோவும் இணைந்து பிரசவத்திற்குப் பிந்தைய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறிய ரமணன், குடும்பங்களுக்கு ஏற்ற பணிச் சூழலை உருவாக்க முதலாளிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், “ஒரு தாயின் நல்வாழ்வே நாட்டின் உண்மையான உற்பத்தித் திறனின் அடித்தளம்” என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.








