சபா மாநிலம், குடாட் பகுதியைச் சேர்ந்த பாங்கி தீவின் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், 31 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரிலிருந்து சபா மாநிலத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு பயணம் மேற்கொண்ட அன்வார், இன்று அத்தீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நாட்டின் மிகப்பெரிய தீவான பாங்கி தீவு தேசிய வளர்ச்சி திட்டங்களில் பின்தங்காமல் இருக்க இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறப்பு நிதி சாலை, பாலம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் படகுக்குழாம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
மேலும், புலாவ் பாங்கி மற்றும் புலாவ் பலம்பாங்கன் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளை மேம்படுத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளையில், தேசியப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை பாதுகாப்பு அமைச்சு முன்னெடுக்கவுள்ளதாகவும், காரமிட் பொது படகு குழாமை, படகு முனையமாக தரம் உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.








