மலேசியாவிற்கு 3 நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் அவர்களை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில் இருநாட்டு அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
முன்னதாக இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் சிங்கப்பூர் அதிபருக்கு அதிகாரப்பூர்வ அரசு வரவேற்பு விழா நடத்தப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு மாமன்னர் சிங்கப்பூருக்குச் சென்ற பயணத்திற்குப் பதில் பயணமாக இப்பயணம் அமைந்துள்ளது.
மலேசியாவின் மிக முக்கிய வர்த்தகப் பங்காளியாக விளங்கும் சிங்கப்பூருடனான இருதரப்பு வர்த்தகம், நடப்பு ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 14.5 விழுக்காடு அதிகரித்து, 189.90 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது இருநாடுகளின் ஆழமான நட்புறவை உறுதிப்படுத்துகிறது.








