ஐ. நா பாதுகாப்பு மன்றம், வரும் 2036-2037 ஆம் ஆண்டுக்கான தவணைக்கு, தற்காலிக உறுப்பினர் பதவிக்காக மலேசியா அதிகாரப்பூர்வமாகத் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளதாகத் துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சவுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்று மதியம் நடைபெற்ற நாடாளுமன்றக் கேள்வி-பதில் அமர்வின் போது, பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு விளக்கமளிக்கும் போதே இத்தகவல் வெளியானது.
உலக வல்லரசுகளின் வீட்டோ என்று அழைக்கப்படும் மறுப்பாணை அதிகாரம் தற்போதைய உலகச் சூழலில் முற்றிலும் அநீதியானது என்றும், அது அனைத்துலக அரங்கில் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் அல்லது அனைத்துலக சட்ட மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் நடக்கும் வேளையில் அதன் பயன்பாடு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்பதே மலேசியாவின் தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாடு என்றும் அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார்.
மேலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மலேசியா எப்போதுமே தனது வலுவான பங்களிப்பை வழங்கி வருவதாகவும், வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள 81வது ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் நாட்டின் வெளியுறவு அமைச்சர் நாட்டின் இந்தத் தெளிவான நிலைப்பாட்டை உலக நாடுகளின் மத்தியில் மீண்டும் வலியுறுத்துவார் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.








