மலேசியாவின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களுக்கு எதிரான சித்தாந்தங்களைப் பரப்பும் தளமாக, ஜோகூர் மாநிலத்தைப் பயன்படுத்த, எந்த அமைப்பையும் அனுமதிக்கமாட்டோம் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஆன் ஹபீஸ் காசி தெரிவித்துள்ளார்.
பாரஸ்ட் சிட்டியில் அமைந்துள்ள, நெர்வொர்க் ஸ்கூல் எனப்படும், இணைந்து வாழும், இணைந்து பணியாற்றும் சமூக அமைப்பைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், மலேசியாவிற்குள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள், தங்களது இரண்டாவது கடப்பிதழைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்து, அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளது குறித்துத் தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக ஆன் ஹபீஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, உள்துறை அமைச்சு, குடிநுழைவுத் துறை, போலீஸ், மற்றும் சுங்கத் துறை ஆகியவை இணைந்து, நெட்வொர்க் ஸ்கூல் அமைப்புடன் தொடர்புடையவர்களின் அடையாளம் மற்றும் குடியுரிமையை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் வைத்திருக்கும் விசா, கடப்பிதழ்கள் மற்றும் இரண்டாவது கடப்பிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் முழுமையாகச் சோதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








