ஈப்போ, பிப்ரவரி.01-
ஈப்போ கல்லுமலை, அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழா, பக்தர்களின் வெள்ளத்தில் களைகட்டியது. நீண்ட விடுமுறையை முன்னிட்டுப் பல மாநிலங்களிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்திப் பரவசத்துடன் பால்குடம் மற்றும் காவடிகள் ஏந்தித் தங்களின் காணிக்கையைச் செலுத்தினர்.

இவ்விழாவிற்கு பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் , துணை அமைச்சர் எம் . குலசேகரன் உட்பட பலர் வருகை புரிந்தனர்.
இவர்களுக்கு ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா நிர்வாகஸ்தர்கள் மரியாதை வழங்கிய பின்னர் டத்தோ அ. சிவநேசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
பேரா மாநிலத்தில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா கொண்டாப்படுகிறது.

இதில் ஈப்போ கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது என்பதுடன் பெரும் திரளாக பக்தர்கள் கலத்து கொண்டனர்.
இந்த ஆண்டு கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட்டும் , பேராவில் கல்லுமலைக்கு அடுத்து தைப்பூசம் கொண்டாட்டப்படும் இரண்டாவது பெரிய ஆலயமாக விளங்கும் அருள் மிகு கம்போங் கப்பாயாங் அருள் மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்திற்கும் ஒரு லட்சம் ரிங்கிட் மானியம் வழங்குவதாகவும் சிவநேசன் அறிவித்தார்.
மேலும் பேசிய அவர் பீடோரில் உள்ள முருகன் ஆலயத்திற்கு 25 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார்.
பேரா மாநில அரசு, இம்மாநிலத்தில் செயல் பட்டு வரும் ஆலயங்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் அதே வேளையில் நிலப்பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஆலயங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் டத்தோ சிவநேசன் உறுதி அளித்தார்.








