கோலாலம்பூர், பிப்ரவரி.12-
நெகிரி செம்பிலான், செனவாங், தாமான் துவாங்கு ஜாபார் (Taman Tuanku Jaafar) பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டு மஹா சிவராத்திரி விழா மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையவுள்ளது.
இந்தச் சிறப்பு வழிபாடுகளைத் தலைமையேற்று நடத்துவதற்காக, திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்கர தேசிய சுவாமிகள், இன்று மாலை 6 மணியளவில் முழு பாதுகாப்புடன் மலேசியா வந்தடைந்தார். அவரை ஆலய நிர்வாகத்தினரும் பக்தர்களும் விமான நிலையத்தில் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
மறுநாள் பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.31 மணிக்கு சிறப்பு வழிபாட்டுடன் பிரதோஷப் பூஜைகள் அனைத்தும் நடைபெறும்.
அன்றைய தினம் இரவு மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெறும். குறிப்பாக இரவு 7:01 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நான்கு கால பூஜைகள் நடைபெறும்.
இந்த அரிய ஆன்மீக வைபவமான சிவபுராணப் பாராயண நிகழ்விலும், பிரதோஷப் பூஜைகளிலும், மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாட்டிலும் பக்த பெருமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டு, எம்பெருமான் ஈசனின் திருவருளையும் குருதேவரின் அருளாசியையும் பெற்றுய்யுமாறு தேவஸ்தான நிர்வாகத்தினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர். மேல்விபரங்களுக்கு: 017- 322 5400.








