செனாவாங், பிப்ரவரி.14-
நெகிரி செம்பிலான், செனாவாங், தாமான் துவாங்கு ஜாஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான திருக்கோயிலில் நாளை பிப்ரவரி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷப் பூஜைகள் மற்றும் மஹா சிவராத்திரி விரத சிறப்பு வழிபாடு வெகுசிறப்பாக நடைபெறவிருக்கின்றன.
மஹா சிவராத்திரியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.31 மணிக்குத் தொடங்கி விக்னேஷ்வரர் வழிபாட்டுடன் பிரதோஷப் பூஜைகள் அனைத்தும் நடைபெறவிருக்கின்றன.

திருக்கயிலாய பரம்பரை கந்தப்பரம்பரை திருஞானசம்பந்தர் ஆதீனம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் தலைமையில் பூஜைகள் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாளை இரவு 7.01 மணிக்குத் தொடங்கி, மறுநாள் அதிகாலை வரை மஹா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளன.

சிவராத்திரியின் இரண்டாம் கால பூஜையில், சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு, தனிச்சிறப்பான கைலாய அலங்காரத்துடன் லிங்கோத்பவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும். பொதுவாக மூலஸ்தானத்திற்குப் பின்புறம் வீற்றிருக்கும் லிங்கோத்பவருக்கு, இக்கோயிலில் இத்தகைய சிறப்பான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவது மிகவும் தனித்துவமான விசேஷமாகும்.
இந்தச் சிவராத்திரி பூஜைகள் அனைத்தும் சுவாமிகள் தலைமையில் சாஸ்திரோக்தமாக நடைபெறவுள்ளன. இந்த புண்ணிய நிகழ்வில் சுற்றுவட்டாரப் பொதுமக்களும் சிவபக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு, எம்பெருமான் சிவபெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு தேவஸ்தான நிர்வாகச் சபை அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.








