ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.01-
பினாங்கு தைப்பூச விழாவில் இரவு 11 மணிக்குள் தண்ணீர் பந்தல்களில் இசை நிறுத்தப்பட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, போலீஸ் துறையின் உத்தரவு அல்ல என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் விளக்கம் அளித்தார்.
அந்த உத்தரவு, பினாங்கு இந்து அறப்பணி வாரியமும், பினாங்கு மாநகர் மன்றமும் இணைந்து முன்வைத்தே பரிந்துரையின் அடிப்படையிலேயே தண்ணீர் பந்தல்களில் இரவு 11 மணிக்குள் அனைத்து இசைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் போலீஸ் பெர்மிட் வெளியிடப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே போலீஸ் துறையும் அந்த நடைமுறையை அமல்படுத்துகிறது என்று டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெளிவுப்படுத்தினார்.
பினாங்கு தைப்பூசத்தையொட்டி தண்ணீர் மலையில் அரச மலேசிய போலீஸ் படையின் பினாங்கு போலீசார் அமைத்துள்ள தண்ணீர் பந்தலுக்கு இன்று காலையில் வருகை புரிந்து பக்தர்களுக்கு தாகம் தீர்க்கும் பணியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ அஸிஸி இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசுகையில் பினாங்கு தைப்பூச விழா மிக அமைதியாகவும், எவ்வித இடையூமின்றி நடைபெறுவதற்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு 1,280 போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
இன்று காலை 10.40 மணி வரையில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் பொதுமக்களும் திரண்டுள்ள வேளையில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என்று எதிபார்க்கப்படுவதாக டத்தோ அஸிஸி இஸ்மாயில் குறிப்பிட்டார்.








